எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்.


"மக்ளே  எனக்கு வயசாகிட்டே இருக்குலாப்பா..எனக்க காலத்துக்கு பொறவு ஒனக்கு யாரு இருக்கா? ஒண்ணு கெடக்க ஒண்ணு  ஆயிட்டுனா ஒன்ன யாருடே பாத்துகிடுவா?ஒனக்கு ஒரு கல்யாணத்த செய்து வச்சிட்டா இந்த கட்ட நிம்மதியா போயி சேந்துரும். நீதான் சொன்னா கேக்க மாட்டக்க". இது தாயின் குமுறல்.

"ஆமாம்மா, நானும் ஒன்கிட்ட சொல்லனும்னு  தான் இருந்தேங். ஏங்கூட ஒரு புள்ள வேலை பாக்கா.நல்லா இருப்பா.நல்ல கொணம்.ஒனக்கும் புடிக்கும். நம்ம புள்ளதாம்ம". இந்த  மகனின் பதில் அவளை இருபது வருடங்களுக்கு பின்னால் அழைத்து சென்று விட்டது.

அவனிடம் சொல்லாதது அவளின் தவறுதான். கண்ணீர் வடிய மனம் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டிருந்தது....

வீட்டில் மூத்த மகள் என்பதால் தம்பி தங்கைகளை கவனித்து கொள்ள பள்ளிக்கூடத்தை நினைத்துக்கூட பார்த்திருக்க வில்லை.அறிவிலி ஆதலால் தானோ கட்டியவன் விட்டு சென்று விட்டான்; கையில் ஒரு குழந்தையோடு. இப்போது அவள் ஒரு கைம்பெண்.
கையில் காசில்லை.கூலிக்கு ஓடி ஓடி உழைத்தாலும் கால் வயிற்றுக்கு தான் கஞ்சி கிட்டியது.காலங்கள் கடந்து போயின.மகனை படிக்க வைத்து விட வேண்டும். என்னுடைய துன்பங்கள் என் மகனுக்கு வரக்கூடாது என எண்ணியவள் அவனை பள்ளியில் சேர்க்க முடிவெடுத்தாள். அதற்கு தான் சாதி சான்று வேண்டுமே!, விண்ண ப்பமும் செய்தாள்.



கிராம அலுவலர்: என்னம்மா புள்ளைய கூண்டியாந்துருக்க?வீட்டுகாரன அனுப்ப வேண்டியது தானே?

தாய் : அவரு விட்டுட்டு போயி நாலு  வருசம் இருக்கும்யா
கிராம அலுவலர்: சொத்து கித்து இருக்கா?

தாய் : இல்லய்யா 

கிராம அலுவலர்: பின்ன என்னத்த வச்சி அவன படிக்க வைப்ப?

தாய்: தெரியலய்யா 

கிராம அலுவலர் : என்ன சாதிம்மா?

தாய்: நாயுடுங்க 

கிராம அலுவலர்: இந்த சாதிக்கு அரசாங்க சலுக ஒண்ணும்  கெடைக்காதே!? தாழ்த்தப்பட்ட சாதின்னு போட்டுருவமா?அரசாங்கம் ஒதவி கெடைக்கும்லா? என்ன சொல்ற? 

தாய்: அது எப்டிய்யா?

கிராம அலுவலர்: ஆபத்துக்கு பாவமில்லம்மா...

 தாய்: எம்புள்ள நல்ல வரணும்னா என்ன வேணும்னாலும் செய்ங்கையா       

கிராம அலுவலர் :சரி, யாருகிட்டயும் சொல்லாண்டாம். சரியா?

தாய்: சரிங்கய்யா.   

கிராம அலுவலர்: நாளைக்கு வா. எல்லாம் சரியாயிரும்!


பிறப்பு ஒரு சாதி!
படிக்க ஒரு சாதி!!
வண்டி சக்கரமாய் காலங்கள் ஓடி விட்டன.
இன்று மகன் பட்டதாரி!
மருத்துவத் துறையில் பணி!!
கை நிறைய சம்பாத்தியம்!!!

தாய் : நாம எந்த சாதிடா?!

சாதிக்கு வித்திட்டோரே, சாதி தீவிரவாதிகளே, சாதி சங்கங்களே, சாதி கட்சிகளே, சாதியில் முனைவர்களே

எனக்கொரு  உண்ம  தெரிஞ்சாகணும்.!!!

Comments

Popular posts from this blog

இரங்கற்பா

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

எதுடா நீதி?